Monday, 20 May 2024

அகந்தை

 யாருக்கில்லை அகந்தைஇங்கு
யாருக்கில்லை அகந்தை

கற்றவன் என்றால்
வித்துவச் செருக்கு

காசைக் கண்டவன்
செல்வச் செருக்கு

பலமாய் இருந்தால்
அதிலொரு செருக்கு

புகழில் மிதந்தால்
அதிலும் செருக்கு

அழகாய் இருந்தால்
அதற்கொரு செருக்கு

கலையில் சிறந்தால்
அதுவும் செருக்கு

கண்ணகி காட்டிய
கற்பிலும் செருக்கு

நற்கவி பாரதி
நாவினிற் செருக்கு

நக்கீரர் காட்டினார்
நற்றமிழ்ச் செருக்கு

எமனேறும் பரியே
என்று பாடிய

ஔவையின் பாட்டிலும்
தொங்குது செருக்கு

வரத்தினைப் பெற்ற
சூரனின் அகந்தை

 

அதனை அழித்தது
முருகனின் அகந்தை

துட்டனாக்கியது
துரியனின் அகந்தை

அவனை அழித்தது
பீமனின் அகந்தை

சிவனை வணங்கும்
சித்தர்கள் ஆயினும்

சிந்தை எங்கும்
அகந்தை தானே

சிவனுக்கிருந்தது
அதுவும் செருக்கு

சிவனுடன் மோதிய
உமையவள் செருக்கு

எனக்கும் இருக்கும்
உனக்கும் இருக்கும்

உலகில் இங்கே
எவர்க்கும் இருக்கும்

செருக்குடன் வாழ்ந்தால்
மகிழ்வும் இருக்கும்

செருக்கைக் கண்டால்
வெறுப்பும் இருக்கும்

செருக்கில் மிதந்தால்
அழிவும் இருக்கும்

செருக்கே செருக்கால்
செருப்பாய் அழியும்

No comments:

Post a Comment